மிதமான வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள்; அலுவலக நேரத்தில் பயணிகள் கடும் அவதி
சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்று திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் பாதையில் தண்டவாளம் சேதமடைந்ததால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக இயக்கப்படுகின்றன. குறிப்பாக அலுவலகம், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கம்போல் ரயில் சேவைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே நிர்வாகம், பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, ரயில் நேர மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
