சென்னை ராயப்பேட்டையில் தொடங்கிய ஆலோசனை; அடுத்த மூன்று நாட்களில் பல மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் இபிஎஸ்
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி (EPS), கட்சியின் தேர்தல் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்மைய தேர்தல் முடிவுகள், மாவட்ட வாரியான கட்சியின் செயல்பாடுகள், அமைப்பு வலுப்படுத்தல், உறுப்பினர் சேர்க்கை, அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 8 அன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளையும், ஜூலை 9 அன்று திருச்சி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
வரவிருக்கும் அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
