இந்தியாவில் செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தியை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றமாக, அசாம் மாநிலம் ஜகிரோட்டில் (Jagiroad, Assam) டாடா குழுமம் அமைத்து வரும் ரூ.27,000 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு ரூ.14,044 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, மொத்த ஊக்கத்தொகையில் ஒன்றிய அரசு ரூ.10,255 கோடியும், அசாம் மாநில அரசு ரூ.3,789 கோடியும் வழங்க உள்ளன. இந்த நிதி உதவி, இந்தியாவில் உயர்தர சிப் உற்பத்தி மற்றும் மின்னணு உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படுகிறது.
ஜகிரோட்டில் கட்டப்பட்டு வரும் இந்த ஆலை, இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேறிய பிறகு, மொபைல் போன்கள், வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளுக்கு தேவையான செமிகண்டக்டர் சிப்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வடகிழக்கு இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த முதலீடு முக்கிய பங்களிப்பை வழங்கும்.
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் ஒன்றிய அரசு பல்வேறு ஊக்கத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் முக்கிய அங்கமாக டாடா குழுமத்தின் ஜகிரோட் செமிகண்டக்டர் ஆலை கருதப்படுகிறது.
