உலகளவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள சமீபத்திய எச்சரிக்கை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தகுந்த தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பகட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் விரிவுபடுத்தப்படாவிட்டால், 2050-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 3.5 கோடி பேருக்கு புதிய புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும் என WHO தெரிவித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மேலும், தினசரி சுமார் 26,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மக்கள்தொகை அதிகரிப்பு, முதியோர் எண்ணிக்கை உயர்வு, புகையிலை மற்றும் மது பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி குறைவு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல காரணிகள் புற்றுநோய் பாதிப்பை அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
WHO-வின் பரிந்துரைப்படி, ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறியும் பரிசோதனைகள், தடுப்பு விழிப்புணர்வு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, புகையிலை பயன்பாட்டை குறைத்தல் மற்றும் தரமான சிகிச்சை சேவைகளை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்வது அவசியமாகும்.
இந்தியாவைச் சேர்த்து உலக நாடுகள் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக WHO வலியுறுத்தியுள்ளது. சுகாதார விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டிய பரிசோதனைகள் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
