இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்காக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது. கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவளிப்பது போன்ற செயல்பாடுகளை உடையதாகும். வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது.
இதனை பில் கேட்சும் பவுல் ஆலெனும் 1975ஆம் ஆண்டு நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் விளங்குகிறது. அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருப்பவர், (Satya Nadella) சத்யநாதெல்லா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, 2014ல் பொறுப்பேற்றுக் கொண்டார். மைக்ரோசாஃப்டின் கிளவுட் கம்யூட்டிங் மற்றும் டெவலப்பர் கருவிகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் சிஇஓ சந்திப்பு
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதலீடுகளில் கவனம் செலுத்திவரும் அவர், இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று (09.12.2025) அவர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து சத்யநாதெல்லா தனது சமூகவலைதளப்பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், “இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரமதர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு!
ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், AI- யைப் பொறுத்தவரை, இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளதாக கூறியுள்ளார்.
முதலீட்டுக்கு இந்தியா தேர்வு; மோடி நன்றி
சத்யா நாதெல்லாவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது; ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் தனது மிகப்பெரிய முதலீட்டைச் செய்யும் இடமாக இந்தியா தேர்தெடுத்திருப்பதை கண்டு மகிழ்ச்சி; இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று பிரதமர் மோடி அதில் பதிவிட்டுள்ளார். ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
