பாம்பு கடித்த தம்பியை விழிப்புடன் வைத்த அண்ணன்
தம்பியின் உயிரை காத்த அண்ணன் என்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் கவனம் பெற்றுள்ளது. பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் (21) என்ற இளைஞர் சுயநினைவை இழக்காமல், விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவரது சகோதரர் ஒரு மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட முறை கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அருணை தொடர்ந்து விழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவரது சகோதரர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத்துக்கு இடையே, குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
15 விஷமுறிவு ஊசிகள் செலுத்தி சிகிச்சை
மருத்துவமனையில் அருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு 15 விஷமுறிவு ஊசிகள் செலுத்தப்பட்டு, மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளித்துள்ளனர்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அருணின் உயிர் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு கடித்த சம்பவத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியமானதாகும்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், பாம்பு கடித்தால் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பதையும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
