டெல்லி,பிப்.19; சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கியமான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. குற்றவாளிகளின் செயல் வெறும் “ஆயத்த நிலை” (Preparation) அல்ல, அது “பாலியல் வன்புணர்வு முயற்சி” (Attempt to Rape) தான் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பின்னணி; அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு
இது தொடர்பான ஒரு வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தை வெளியிட்டிருந்தது. 11 வயது சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பது மற்றும் அவரது ஆடை நாடாவை (Pyjama string) அவிழ்ப்பது போன்ற செயல்கள், பாலியல் வன்புணர்வு செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட ‘ஆயத்தப் பணிகள்’ மட்டுமே என்றும், அவை ‘பாலியல் வன்புணர்வு முயற்சி’ என்ற வரையறைக்குள் வராது என்றும் கூறி தண்டனையைக் குறைத்திருந்தது. இது சமூக வலைதளங்களிலும் சட்ட நிபுணர்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தின் தலையீடும் கண்டனமும்
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து (Suo Motu) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறையை ‘insensitive’ (உணர்ச்சியற்றது) மற்றும் ‘erroneous’ (தவறானது) என்று கடுமையாகச் சாடியது.
இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “குற்றவாளிகள் சிறுமியைப் பிடித்து, அவரது உடையைச் சிதைத்து, ஒரு பாலத்திற்கு அடியில் இழுத்துச் செல்ல முயன்றது, அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யத் துணிந்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது; தற்செயலாக யாரோ பார்த்ததால் மட்டுமே அந்தத் தவறு தடுக்கப்பட்டுள்ளது; எனவே, இதை வெறும் ‘ஆயத்த நிலை’ என்று கூறுவது சட்டப்படி தவறானது” என்று அந்த சம்பவத்தின்போது நடந்தவற்றை சுட்டிக்காட்டினர்.
சட்டப்பிரிவுகளும் தண்டனை விபரமும்
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம்:
குற்றவாளிகள் மீது பிரிவு 376 (பாலியல் வன்புணர்வு) உடன் இணைந்த பிரிவு 18 (போக்சோ சட்டம் – முயற்சி) ஆகியவற்றின் கீழ் விசாரணை தொடர வழிவகுக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் குறைத்திருந்த தண்டனை மாற்றப்பட்டு, சிறப்புக் நீதிமன்றம் வழங்கிய அசல் சம்மன் உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
பாலியல் குற்ற வழக்குகளில் நீதிபதிகள் மிகவும் கவனமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியன் வன்முறை வழக்குகளில் ஒரு மைல்கல்
இந்தத் தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகளில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வெறும் நுணுக்கமான சட்ட விளக்கங்களை மட்டும் பார்க்காமல், குற்றத்தின் தீவிரம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நிலையை உணர்ந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
