காட்பாடி,மார்ச்.20; சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக முழு வீச்சில் தயாராகிவரும் சூழலில், அக்கட்சியில் நான்கு அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படாது என்ற தகவல் சமீபத்தில் பரவி கட்சியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான துரைமுருகனின் அரசியல் எதிர்காலம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அக்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
வயது மூப்பும் உடல்நலக் குறைவும்: பின்னணி என்ன?
நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் துரைமுருகனுக்கு தற்போது 87 வயது ஆகிறது. சமீபத்தில் அவர் வீட்டில் தவறி விழுந்ததில் முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நீண்ட ஓய்வுக்குப் பிறகு அவர் கட்சிப் பணிகளில் பங்கேற்று வந்தாலும், அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வரும் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற பேச்சுகள் எழுந்தன.
ஏற்கனவே செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத 4 அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் கிடையாது என்று கூறப்பட்டு வரும் நிலையில், துரைமுருகன் குறித்த இந்தத் தகவல் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
துரைமுருகனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
இந்தச் சூழலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று துரைமுருகனைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடத் தனக்கு இருக்கும் விருப்பத்தை துரைமுருகன் உதயநிதியிடம் வெளிப்படையாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
காட்பாடி தொகுதியில் 1996 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் துரைமுருகன், இதுவரை 10 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள்) அவர் வெற்றி பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சீட் உண்டு… ஆனால் பதவி இல்லையா?
தற்போதைய நிலவரப்படி, கட்சியின் மூத்த தலைவர் மற்றும் விசுவாசி என்ற அடிப்படையில் அவருக்கு கடைசியாக இந்த ஒருமுறை மட்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், இதில் ஒரு முக்கிய நிபந்தனை இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், துரைமுருகனுக்கு புதிய அமைச்சரவையில் ‘அமைச்சர் பதவி’ எதுவும் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் மூலமாக இந்தத் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் இதற்கு துரைமுருகன் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
மூத்த தலைவர்களின் நிலை என்ன?
திமுகவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒருபுறம் ஒலிக்க, மறுபுறம் துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை எவ்வாறு கையாள்வது என்பது தலைமைக்கு பெரும் சவாலாக உள்ளது. வரவிருக்கும் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் துரைமுருகன் பெயர் இடம்பெறுமா? இடம்பெற்றாலும் அவருக்குப் பதவி வழங்கப்படுமா? என்பதற்கான விடை திமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தான் தெரியும்.
