சென்னை,மார்ச்.08; சென்னை மணப்பாக்கம் பகுதியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
வெள்ள அபாயத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை
2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, மணப்பாக்கம் பகுதியில் இருந்த தரைப்பாலம் (Causeway) நீரோட்டத்தைத் தடுத்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பழைய தரைப்பாலத்திற்குப் பதிலாக நவீன மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பின்னர் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி, தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.
80 சதவீத பணிகள் நிறைவு
நீர்வளத் துறை (WRD) அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, சுமார் 24.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்தப் பாலப் பணிகளில் 80 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளது. 175 மீட்டர் அகலமும், இரு வழிப்பாதையும் கொண்ட இந்த மேம்பாலம், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் (OTA) நிதி உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது.
விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்
தற்போது பாலத்திற்கான கான்கிரீட் கர்டர்கள் (Precast concrete girders) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து நிதி அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இத்திட்டம் சற்றே தள்ளிப்போனது. இருப்பினும், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் கொண்டுவர அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
குடியிருப்பாளர்களுக்கு நிம்மதி
இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, மணப்பாக்கம், கோளப்பாக்கம், L&T காலனி மற்றும் முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பு கணிசமாகக் குறையும். பழைய தரைப்பாலம் அகற்றப்படுவதன் மூலம், ஆற்றில் நீர் தடையின்றி ஓட வழிவகை செய்யப்படும். இது சென்னை விமான நிலைய ஓடுதளம் வரை தேங்கும் உபரி நீர் பிரச்னையைத் தீர்க்கவும் உதவும்.
புதிய மேம்பாலம்; மணப்பாக்கம், சுற்றுவட்டார மக்களுக்கு நிம்மதி
இந்த புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்படுவது மணப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும். பருவமழை தொடங்குவதற்கு முன்னரே இப்பணிகள் நிறைவடைந்தால், சென்னை பெருநகரின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
